Monday, February 23, 2026

Blood Moon Lunar Eclipse March 3 2026 இரத்த நிலவு சந்திர கிரகணம் மார்ச் 3 2026.

Blood Moon Lunar Eclipse March 3 2026 இரத்த நிலவு சந்திர கிரகணம் மார்ச் 3 2026. 



2026-ன் முதல் முழு சந்திர கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கலாம்; எப்போது தெரியுமா?


இரவு வானின் கருமை நிறத்தில், பூமியின் நிழல் நிலவை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் காட்சியை விட ஒரு சிறந்த அனுபவம் இருக்க முடியாது. அந்த அற்புதக் காட்சியை வழங்க வருகிறது மார்ச் 3-ஆம் தேதி நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியாக நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் ராட்சத நிழல் நிலவின் மீது படர்வதை நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இது அறிவியல் பூர்வமாகப் பகுதி கிரகணம், முழு கிரகணம் எனப் பிரிக்கப்பட்டாலும், மார்ச் 3 அன்று நாம் காணப்போவது ஒரு 'முழுமையான' காட்சி.

சந்திர கிரகணத்தின் உச்சகட்டமே 'முழு சந்திர கிரகணம்' தான். நிலவு முழுமையாக பூமியின் அடர் நிழல் பகுதிக்குள் (Umbra) நுழையும்போது இது நிகழ்கிறது. மார்ச் 3 அன்று, இந்தியாவில் சந்திரன் உதயமாகும் போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்ட நிலையில் தான் தோன்றும்.

இந்த நேரத்தில் நிலவு முற்றிலும் மறைந்து போய் இருட்டாகத் தெரியாது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். மாறாக, அது ஒரு வசீகரமான செப்பு நிறத்திலோ அல்லது அடர் சிவப்பு நிறத்திலோ ஜொலிக்கும். இதனாலேயே வானியலாளர்கள் இதனை 'பிளட் மூன்' (Blood Moon) அல்லது 'இரத்த நிலவு' என்றழைக்கிறார்கள்.

சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை பூமியின் வளிமண்டலம் சிதறடித்துவிட்டு (Rayleigh scattering), நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் நிலவின் பக்கம் வளைத்து அனுப்புகிறது. அந்தச் சமயம் பூமியின் காற்றில் இருக்கும் தூசு மற்றும் மேகங்களைப் பொறுத்து நிலவின் சிவப்பு நிறம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும். பூமி நிலவை விட அளவில் பெரியது என்பதால், இந்த முழு கிரகண நிகழ்வு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்.

பகுதி கிரகணத்திற்கும் முழு கிரகணத்திற்கும் என்ன வித்தியாசம்? வானில் நடக்கும் இந்த விளையாட்டை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை துல்லியமாக நேர்க்கோட்டில் அமையாதபோது இது நடக்கும். நிலவின் ஒரு பகுதியை மட்டும் யாரோ கடித்தது போலக் கருப்பாகத் தெரியும். இதில் 'சிவப்பு நிறம்' தோன்றாது. முழு சந்திர கிரகணம்- நிலவின் 100% பரப்பும் பூமியின் நிழலுக்குள் வந்துவிடும். அப்போதுதான் அந்த மாயாஜாலச் சிவப்பு நிறம் தோன்றும்.

பாதுகாப்பாகப் பார்க்கலாமா? நிச்சயமாக, சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை நாம் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கண்களால் தாராளமாகப் பார்க்கலாம். மார்ச் 3 அன்று இரவு வானைப் பார்க்கத் தயாராகுங்கள். பூமியின் நிழல் நிலவை எப்படிச் சிவப்பாக மாற்றுகிறது என்பதை ரசிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு.



த.பாதர் பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - புத்தகக் கண்காட்சில் பங்கேற்றப்பு.

த.பாதர் பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - புத்தகக் கண்காட்சில் பங்கேற்றப்பு.

உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  த.பாதர் பேட்டையில் வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு 92 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவர்கள் புத்தகக் கண்காட்சியை மிகவும் மகிழ்ச்சியாக பார்த்தனர். மாணவர்களுக்கு தேவையான  புத்தகங்களை வாங்கி சென்றனர்.வானியல் அரங்கில் செயற்கைக்கோள், நிலா, புதிர்கள், விண்வெளி வீரர்கள்  பதாகைகள் போன்றவற்றை கண்டு களித்தனர்.



புத்தக் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் திருமதி தனலட்சுமி அறிவியல் ஆசிரியர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். உடன் ஆ.சுப்ரமணியன், ஆனந்தம், க. பா. சுப்ரமணியன் ஆசிரியர்களுடன் அழைத்துச் சென்று வந்தது மிகவும் சிறப்பு. புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சிறைச்சாலை கைதிகளுக்கு நூல் வாங்கி, அன்பளிப்பாக பெட்டியில் இட்டு வந்தோம். புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்த திருச்சி நிர்வாகத்திற்கு எம் பள்ளயின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏.










Wednesday, February 18, 2026

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.


உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்பேட்டையில் 13 மாணவிகளுக்கு ஸ்ரீ ராஜ திவ்யபாரதி சமூக அறக்கட்டளை சார்பாக திருக்குறள் முறை விருது வழங்கப்பட்டது. 

உலகப் பொதுமறை நூலான திருக்குறளில், எம் பள்ளி 13 மாணவிகள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கதை  எழுதினார்கள். இதன் மூலம்  மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை திறன் மேம்படுத்தம் விதமாக இந்நிகழ்வு இருந்தது. மாணவர்கள் எழுதிய திருக்குறள் கதை அறமே வரம் என்ற தொகுப்பு நூலில் வெளிவந்துள்ளது. இவர்களின் திறமையைப் பாராட்டி திருக்குறள் முகை விருதிற்கான சான்றிதழ், கேடயம் மற்றும் மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இக்கால மாணவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் எழுதிய நூலில் உள்ள சிறப்பு அதில் உள்ள வாழ்வியல் கருத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தன் காரணமாக இந்நிகழ்வு அமைந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் வழிகாட்டியாகவும், கதை எழுத பயிற்சி அளித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் அவர்கள் இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளார். உடன்  சுப்ரமணியன், ஆனந்தம் ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.


இன்று (18.02.2026) கலைத் திருவிழாவில் மாநில அளவில் (களிமண் சுதை வேலைப்பாடு) மூன்றாம் இடம் பிடித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,   த.பாதர்பேட்டையில் எட்டாம் வகுப்பு பயிலும் வே. தரணீஷ்  என்ற மாணவனுக்கு உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் ஐயா மற்றும் உயர்திரு.முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அம்மா அவர்களால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு 🙏🙏🙏

Sunday, February 15, 2026

வானில் தோன்றும் நெருப்பு வளையம்! எப்போது? பிப்ரவரி 17.

வானில் தோன்றும் நெருப்பு வளையம்! எப்போது? பிப்ரவரி 17.


வானியல் நிகழ்வுகளில்  ஆண்டுதோறும், கிரகங்கள் மாற்றம், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முதல் வானியல் நிகழ்வாக, வரும் பிப்ரவரி 17-ந் தேதி, பிரம்மாண்டமான ‘நெருப்பு வளைய’ (Annular Solar Eclipse) சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமான, இந்த அரிய நிகழ்வு முதன்மையாக அண்டார்டிகா கண்டத்திலுள்ள 2 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தெளிவாகத் தெரியும். இந்திய நேரப்படி, இந்த கிரகணம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:31 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்டார்டிகாவைத் தவிர்த்து, அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் சூரிய உதயத்திற்குப் பிறகு இதன் பகுதி நேரக் கிரகணத்தைக் காண முடியும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காண முடியாது.

வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?


சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆனால், சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும்போது (Apogee), அதன் அளவு சூரியனை விடச் சிறியதாகத் தோன்றும். அந்த நேரத்தில் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் (96%) மறைக்கும்.

இதனால் சூரியனின் விளிம்புப் பகுதி மட்டும் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது 'நெருப்பு வளையம்' போலக் காட்சியளிக்கும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. பிரத்யேக சூரிய கிரகண கண்ணாடிகளை பயன்படுத்தி மட்டுமே இதைப்பார்க்க வேண்டும். இந்த 'நெருப்பு வளைய' காட்சி அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை நீடிக்கும் என்று ஃபோர்ப்ஸ் (Forbes) அறிக்கை கூறுகிறது.

அடுத்தடுத்த கிரகணங்கள் எப்போது?

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, கிரகணங்கள் எப்போதும் ஜோடியாகவே நிகழும். இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்த 2 வாரங்களுக்குப் பிறகு, ஒரு முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கப் பகுதிகளில் தெளிவாகத் தெரியும்.

பிப்ரவரி 2027: சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், கானா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் 'நெருப்பு வளைய' கிரகணம் தெரியும்.

2028: ஈக்வடார், பெரு, பிரேசில், மொராக்கோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதைக் காணலாம். ஜனவரி 2030: அல்ஜீரியா, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த நிகழ்வு அரங்கேறும்.

பொதுவாக இந்த கிரகண நிகழ்வுகள் நடைபெறும்போது ஒரு சில நாடுகளில் தெரியும், ஒரு சில நாடுகளில் தெரியாத வகையில் இருக்கும். அந்த வரிசையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Blood Moon Lunar Eclipse March 3 2026 இரத்த நிலவு சந்திர கிரகணம் மார்ச் 3 2026.

Blood Moon Lunar Eclipse March 3 2026 இரத்த நிலவு சந்திர கிரகணம் மார்ச் 3 2026.  2026-ன் முதல் முழு சந்திர கிரகணம்... வெறும் கண்களால் பார்க்...