வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) - பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.
ஆசிரியர் பணி
என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும்
மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும்
உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க,
தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால்
மட்டும் போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும்
இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள். தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை
புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக,
ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது
இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும்
தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அவர்களின்
பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில்
1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்
தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி என்பது
குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம்.
இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து
அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண
இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக
அன்பும், அக்கறையும்
கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ
தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி,
அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு
அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில்
பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.
ஒரு மாணவனை
தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின்
வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும்
போற்றப்படுகிறார்கள். ஆசிரியர் தின நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப்
போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை
நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள்.
மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக
அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும்,
அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை
வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர். இத்திருநாளில்
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள்
என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும்
வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 05, 1888ல் திருத்தணி அருகே
உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை
முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும், பின்னர்
முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில்
உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை,
பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர்,
மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத்
தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின்
தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ,
ப்லோடினஸ், காந்த், பிராட்லி,
மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை
நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும்
படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை
வெளிப்படுத்தினார்.
1918
ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட
இவர், 1921ல், கல்கத்தா
பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப்
பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின்
அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப்
போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக
பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த
கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று
வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன்
மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும்
என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக
வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக்
கூறலாம்.
1931
ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,
ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939 ஆம் ஆண்டு, பெனாரஸ்
இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல்,
அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப்
பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை,
பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக்
கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான
கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின்
பரிந்துரைகள் பெரிதும் உதவியது. இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை
அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை
விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.
கல்வியின்
நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை
வளர்த்து, அனைவற்றிற்கும்
மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில்
நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக
உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு
இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும்
கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின்
உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு
அளிக்கவில்லை என்று சாடினார்.
இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார். மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார். உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி (சக்தி) வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார். கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது. நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்க்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975ல் தனது 86வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர்
உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..
Source By: itstamil, Wikipedia,
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment