Tuesday, December 22, 2020

வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22, 1887). - தேசிய கணித தினம்.

வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன்  பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22, 1887). - தேசிய கணித தினம். 

சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) டிசம்பர் 22, 1887ல் கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும், ஈரோட்டில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். இராமானுஜன் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். இராமானுஜம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894ம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 

பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 1897ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார். 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல், அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில்(Analysis) கூறப்படும் தொடர் வினை(Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு(exponential function), கலப்பு மாறியின் மடக்கை(logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. 


Approximating the Volume of a Sphere - GIF on Imgur

தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது. அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை. இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. 

இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது. ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும்(Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு(Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. கணிதக் குறியீடுகளின் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும்.

 File:01-Squaring the circle-Ramanujan-1914.gif - Wikimedia Commons

வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல்(convergence), இருப்பு(existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும், விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன். மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர்  மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி. ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன் எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 

18, 19வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. 1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது.

 10+ Srinivasa Ramanujan ideas | mathematician, number theory, mathematics

கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது. பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள். எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம். இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 

மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர்.ரங்கனாதன் எழுதியது “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

 Srinivasa Ramanujan

இராமானுஜம் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள்(Magic Squares), தொடர் பின்னம்(Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள்(Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள்(Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர்(hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985லிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.

 Srinivasa Ramanujan – A Man, Myth and Beyond – Ajith Kumar. CC

சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910ல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். 1911ல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. மே 1, 1913 முதல் இராமானுஜன் சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.

 e^x (Page 1) / Euler Avenue / Math Is Fun Forum

கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார். இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லியிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை.

 वो हिंदुस्तानी जिससे गणित भी घबराता था! जिससे एक देवी संख्याओं की भाषा में  बातें करती थी! - The Article

1918ல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான். இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் ஏப்ரல் 26,1920ல் தனது 32வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இராமானுசன் அவர்கள் பெயரால் 1997ல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?

இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை.

வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜனின் உண்மை நிலையை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும்.

இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார். குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்.

ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள்.
இராமானஜனோ மறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்.

ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை.
கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள்.

எங்கு தேடியும் காணவில்லை.

அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான்.
எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம்.
ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன் இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்.

1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார்.

இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும்.

நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான்,

நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன்.
எனது மூளையைப் பாதுகாக்க எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார்,

இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.

ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார்.

நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன. -

ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன்.

அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது.

காச நோயால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும்.

நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன்.
இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்.

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது.
கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும். கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

இதற்கிடையே கணிதமேதை குறித்த வாழ்வாதாரங்களைத்தான் காப்பாற்றவில்லை ……….கணிதத்தையாவது காப்பாற்றினோமா என்றால் நாலும் மூணும் எத்தனை என்பதற்கே கால்குலேட்டரைத் தேடும் ஒரு புதிய தலைமுறை அதிர்ச்சிதரும் நிஜமாய் நம் கண் முன்னே நடமாடும் கொடுமை...

Source By: Wikipedia

தகவல்: முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

2 comments:

நாமக்கல் கலாம் பயிற்சி மையத்தில் விண்வெளி கருத்தரங்கம்

நாமக்கல் கலாம் பயிற்சி மையத்தில் விண்வெளி கருத்தரங்கம் நாமக்கல் கலாம் மாணவர்கள் பயிற்சி மையத்தில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் ந...