Friday, January 1, 2021

இந்தியாவில் தயாரானது கொரோனா தடுப்பூசி... நாளை ஒத்திகை.

இந்தியாவில் தயாரானது கொரோனா தடுப்பூசி... நாளை ஒத்திகை.

இந்தியாவில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி.. அவசர கால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு ஒப்புதல். 


சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஃபைசர் தாக்கல் செய்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் இன்று அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓகே கூறப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம். இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் 'கோவாக்சின்' தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்குகிறது.

கடந்த புதன்கிழமை இதுபோல ஒரு கூட்டம் நடந்தபோது பைசர் நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கேட்டதால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாளை பல மாநிலங்களிலும் தடுப்பூசி டிரையல்கள் நடத்தப்படும் நிலையில், இன்று நிபுணர் குழு மீட்டிங் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில், மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் வி.ஜி. சோமானி, "மகிழ்ச்சியான புத்தாண்டாக மாறும் என்ற நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் சீரம் நிறுவனம்தான். ஏற்கனவே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா வேக்சினின் சுமார் 50 மில்லியன் டோஸ் தயாரித்துள்ளது அந்த நிறுவனம். மார்ச் மாதத்திற்குள் அதை 100 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். சீரம் நிறுவனத்துடன் இந்திய அரசு இன்னும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், முதலில் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதாகவும், பின்னர் தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில்தான், கோவிஷீல்டு தடுப்பூசியில் தங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையையடுத்து, விண்ணப்பங்கள் இறுதி ஒப்புதலுக்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) செல்லும். இந்த மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பிக்க அரசு விரும்புவதால், ஒப்புதல் வேகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எதிர்பார்ப்பு


தடுப்பூசி ஒத்திகை இந்த வாரம் துவக்கம்

''தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இந்த வாரம் நடைபெறும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூசனுடன், கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
இந்தியாவில் கடைசி கட்ட பரிசோதனையில் உள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தை பயன்படுத்த, பிரிட்டன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த, 21 நர்ஸ்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, இந்த வாரம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

நாளை ஒத்திகை


தடுப்பூசி பயன்படுத்த அனுமதி கிடைத்ததும், அதை மக்களுக்கு அளிப்பது தொடர்பான ஒத்திகை, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை நடக்க உள்ளது. அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், மூன்று வேளைகளாகப் பிரித்து, ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம், தடுப்பூசி வினியோகம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரியவரும். அந்தக் குறைகளை களைவதற்கு, இந்த ஒத்திகை உதவும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

36 ஆயிரம் 'வென்டிலேட்டர்'


மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்புக்கு முன், நாடு முழுதும், 16 ஆயிரம், 'வென்டிலேட்டர்' எனப்படும், சுவாச கருவிகளே பயன்பாட்டில் இருந்தன. ஆனால், கடந்த, 12 மாதங்களுக்குள், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே, 36 ஆயிரம் கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பி.பி.இ., எனப்படும், முழு உடல் கவச உடை தயாரிப்பும் வேகமெடுத்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு, 10 லட்சம் உடைகள் தயாரிக்கப்படுகின்றன; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் விலை, 900 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக குறைந்துள்ளது.நாளொன்றுக்கு, ஒரு லட்சம், என் - 95 முக கவசங்கள், மூன்று நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன. ஆனால், தற்போது, 3,000 நிறுவனங்கள் வாயிலாக, எட்டு லட்சம் முக கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. 'சிரிஞ்ச்' எனப்படும் ஊசிகள், ஏற்கனவே, 83 கோடி வாங்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக, 35 கோடி வாங்கப்பட உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

94 சதவீதம் பாதுகாப்பானது!


அமெரிக்காவைச் சேர்ந்த, 'மாடர்னா' மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, 94.1 சதவீதம் பாதுகாப்பானது என்பது, மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் துவங்கிய இந்தப் பரிசோதனை, தற்போது, மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. அதன் படி, இந்த தடுப்பூசி, 94.1 சதவீதம் பாதுகாப்பானது, பலனளிக்கக் கூடியது என்பது தெரியவந்துள்ளது.





No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...