உலகில் தலைசிறந்த பின்லாந்து கல்வி முறையில், அப்படி என்னதான் இருக்கிறது?
பின்லாந்தில்
ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை
வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி, மூன்று வயதில் எல்.கே.ஜி, நான்கு வயதில்
யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை.கருவறையி ல் இருந்து
வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து
கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன்
இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்
இருந்தும் ஒவ்வோர் ஒலியில்லிருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும்,
செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை
பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில்லிருந்து வேரோடு
பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும என
எண்ணுவது மூடநம்பிக்கை.
ஏழு வயதில் பள்ளிக்குச்
செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி
நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு
தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே
முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு,
மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு
பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது
என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக,
13 வயது வரை ரேங்கிங் என்ற தரம்
பிரிக்கும் கலாச்சாரம் கிடையாது. பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம்
கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறையும் கிடையாது.
தங்கள்
பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள்
விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப்
பெற்றுக்கொள்ளலாம். கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில்
அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. சக
மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது
இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே
வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர்
இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட
முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம், அதற்கு அதிக
எண்ணிக்கை கூடவே கூடாது.
முக்கியமாக
பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி
என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும், அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவருக்கும்
சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99%
குழந்தைகள்
ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில்
94% பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’என்ற
அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. தேர்வுகளை
அடிப்படை முறைகளாக இல்லாத
இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும்
மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு
தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். "இது
எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத
புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின்
ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே
மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின்
நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை
ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை. பின்லாந்து
கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும்
அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56
நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும்
செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச்
சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை
நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும்
அமைச்சர்களும் ஓடோடி வந்து
ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள்
சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish
Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல
முடியாது. ஏனெனில் "OCED" அமைப்பின்
ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள
முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்.
இல்லாத
நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே
முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள், நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க
பார்வை, மதிக்கத்தக்க
மனநிலை. பின்லாந்தில்
ஆசிரியர் பணி என்பது, நம்
ஊர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம்
உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்
செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு
பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம் அங்கு
ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல.
மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும்
மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து
ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும்
பயிற்சி எடுக்க வேண்டும்.
பிறகு, ஆறு மாத காலம்
ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்
ஆசிரியர் பயிற்சி.
ஏதாவது ஒரு
பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத்
திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு,
தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச்
சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களை செலவிட
வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும்
சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்
மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய
தருணம் இது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி
நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து
செயல்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள
வேண்டியது அதிகம் இருக்கிறது. முதலில், பிள்ளைகளுக்கு நல்ல
சிந்தனைகளை ஏற்படுத்துங்கள். ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று
நினைக்காதீர்கள்.
பிள்ளைகள்
எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள்
பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர்
செய்கிறார்கள். இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும். எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது.
மூடன், அறிவாளியாகலாம். பைத்தியம்,
தெளிந்த சித்தமுடையவனாகலாம். ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி
அலட்சியம் செய்யக் கூடாது.
தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில்
இருந்து வெளியேற்றப்பட்டவர். பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி. லூயி
பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு
வாங்கினார்.
ஆல்பிரட்
ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார், அவர் ஆசிரியர். ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார். குழந்தைகளுடன்
ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப்
பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள். நிறைகளை
பற்றிப் பேசுங்கள். பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன்
அவனே. நீங்கள் நீங்களே. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து
அவர்கள் கற்றுக்கொள்வார்கள். வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள்.
ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள். எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு
பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
பிள்ளைகளுக்கு
வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள், வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல, மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில். நல்ல
மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள். மலர் தூவியுள்ள
பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து
கொள்வார்கள். உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள். அவர்கள்
உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள். வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து
கொள்வான். சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான்.
விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை
கண்டு கொள்வான்–இது போதும்.
முதலில் நாம்
மாற வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மாற்றம் ஒன்றே
மாறாதது. நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின்
கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம். குழந்தைகளின்
எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.
Source By: தமிழ்
நாடு, facebook பதிவு.
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




மிக நல்ல தகவல்
ReplyDelete